இலங்கைக்கு கடத்த முயன்ற இலட்சம் பெறுமதியான மஞ்சள் பறிமுதல்
இலங்கைக்கு (Sri Lanka) கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான 1200 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உச்சிப்புளி அடுத்த சல்லித் தோப்பு கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த பறிமுதல் நடவடிக்கையை சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
கடல் எல்லை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரகையில், ராமநாதபுரம் கடற்கரை இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இந்திய (India) இலங்கை சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கைக்கு கஞ்சா, சமையல் மஞ்சள், கடல் குதிரை மற்றும் கடல் அட்டை உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகின்றது.
இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து கடத்தல் சம்பவங்களை தடுத்து நிறுத்தி பொருட்களை பறிமுதல் செய்வதுடன் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்து வருகின்றனர்.
இரகசிய தகவல்
இந்தநிலையில் நேற்று (14) செவ்வாய்க்கிழமை மதியம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் உச்சிப்புளி அருகே களிமண்குண்டு அடுத்த சல்லித்தோப்பு கடற்கரை பகுதியில் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேகத்திற்கு இடமாக கடற்கரை ஓரம் கிடந்த மூட்டைகளை சோதனை செய்ததில் அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக சமையல் மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
மஞ்சள் மூட்டை
இதையடுத்து 28 மூட்டைகளில் இருந்த சுமார் 1200 கிலோ எடை கொண்ட சமையல் மஞ்சள் மூட்டைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்று விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சமையல் மஞ்சள் இந்திய மதிப்பு ரூபாய் மூன்று லட்சம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கட்றறொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடத்தல் சம்பவங்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்கத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
