இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் இருவர் அதிரடியாக கைது
இலஞ்சம் கோரிய இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தின் சிரேஸ்ட ஒழுக்காற்று அதிகாரி ஒருவரும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்
100,000 ரூபாவை இலஞ்சமாக கோரிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பயணிகளின் பயணச்சீட்டு
இது குறித்து மேலும் தெரியவருகையில், திருகோணமலை-வவுனியா வழித்தடத்தில் இயக்கப்படும் திருகோணமலை டிப்போவிற்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணிகளின் பயணச்சீட்டுகளை ஆய்வாளர்கள் சரிபார்த்தனர்.
இதன்போது, பயணி ஒருவருக்கு பயணச்சீட்டினை வழங்காமை தொடர்பில் பேருந்தின் நடத்துநராகப் பணியாற்றிய முறைப்பாட்டாளருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.
எனினும், சிரேஸ்ட ஒழுக்காற்று அதிகாரி, முறைப்பாட்டாளருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விசாரணையை முடித்து, மீண்டும் பணியில் அமர்த்த 100,000 ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளார். பின்னர் சந்தேக நபர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரி மூலம் பணத்தை கோரி பெற்றுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
அதன்படி, இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தில் பணிபுரியும் சிரேஸ்ட ஒழுக்காற்று அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரியும் நேற்று (22) பிற்பகல் இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண அலுவலகத்தில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
