ஹோர்முஸ் நீரிணையில் சிக்கி தவிக்கும் ஆயிரக்கணக்கான கடலோடிகள்!
உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல், சர்வதேசக் கப்பல் போக்குவரத்துத் துறைக்கு வரலாறு காணாத சவாலாக மாறியுள்ளதாகச் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) எச்சரித்துள்ளது.
இதனடிப்படையில், தற்போதைய நிலவரப்படி சுமார் 2,000 கப்பல்கள் இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளன.
அவற்றில் சுமார் 20,000 கடலோடிகள் மற்றும் கப்பல் பணியாளர்கள் சிக்கியுள்ளதாக IMO அமைப்பின் செயலாளர் நாயகம் அர்சேனியோ டொமிங்குயஸ் தெரிவித்துள்ளார்.
மன அழுத்தம்
இந்தநிலையில், நீண்டகாலமாக அங்கேயே முடங்கிக்கிடப்பதால் பணியாளர்கள் கடுமையான மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வுக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், கப்பல்களின் இயங்குதன்மைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தீர்ந்துவரும் நிலையில் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடுகளை வழங்க மறுப்பதும் ஒப்பந்தங்களை ரத்து செய்து அதிகக் கட்டணங்களை விதிப்பதும் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளன.

இந்த இக்கட்டான சூழலிலிருந்து கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேற மனிதாபிமான வழித்தடம் ஒன்றை அமைக்க IMO தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள கப்பல்களுக்கான பாதுகாப்புத் திட்டம் நிலைத்தன்மையற்றது என டொமிங்குயஸ் விமர்சித்துள்ளார்.
மேலும், வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்பதற்கான எவ்வித உறுதியும் இல்லாத நிலையில் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் இத்திட்டத்தைச் செயல்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |