திட்வா புயலால் 275,000 குழந்தைகள் பாதிப்பு
“திட்வா” (Ditwa) சூறாவளி காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இலங்கையில் 275,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயத்தை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய இலங்கைக்கான பிரதிநிதி (Emma Brigham) தெரிவித்துள்ளார்.
யூனிசெஃப் மேற்கொண்ட ஆரம்ப மதிப்பீட்டின் போதே இந்தக் தரவுகள் வெளியாகியுள்ளன.
அதிகரிக்க வாய்ப்பு
இருப்பினும், பல பகுதிகளில் இன்னும் சாலை மற்றும் தகவல் தொடர்பு தடைகள் நிலவுவதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று (Emma Brigham) குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூறாவளியால் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான அத்தியாவசிய சேவைகள் தடைப்பட்டுள்ளமை குறித்து யூனிசெஃப் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த பேரழிவால் 4 இலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளின் பாதுகாப்பு அபாயத்தில் உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட சுமார் 1.1 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார சேவைகளை பெறுவது கடினமாகி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் அதிக குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்.
பேரழிவால் சேதமடைந்த அடிப்படை கட்டமைப்புகளை மீளமைத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், குழந்தை பாதுகாப்பு, சுத்தமான குடிநீர், சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ சேவைகள் தொடர்பாக இன்னும் குறைபாடுகள் நிலவுகின்றன என்றும் யுனிசெஃப் எச்சரிக்கிறது.
இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, குழந்தை நட்பு சூழலை உருவாக்குதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு சுத்தமான நீர் வழங்குதல், உளச் சுகாதார ஆதரவு வழங்குதல், ஐந்து வயதுக்குக் குறைந்த குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு கூடுதல் உதவிகளை வழங்க யுனிசெஃப் நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |