மன்னாரில் கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
மன்னார் பேசாலை கடலில் நேற்று (15) மாலை நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன நான்கு பேரில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தைப்பொங்கல் பண்டிகையை தொடர்ந்து குறித்த நான்கு பேரும் கடலில் நீராடுவதற்காக சென்ற நிலையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
காணாமல் போனவர்களில் இருவரது சடலங்கள் நேற்று மாலை மீட்கப்பட்டதுடன் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
அத்துடன் இந்த சம்பவத்தில் காணாமல் போன மற்றுமொருவரின் சடலம் நேற்றிரவு கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 16 முதல் 18 வயதுடைய பேசாலை, வசந்தபுரம், உதயபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இதேவேளை இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவர் ஒருவரும் அடங்குவதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேசாலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |