மட்டக்களப்பில் 5 மனித கொலை : பிள்ளையான் உட்பட மூவருக்கு நீதிமன்றின் உத்தரவு
மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 18 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை (04) காணொளி ஊடாக உத்தரவிட்டு பெhலிஸ் பாயிஸ் என்பவருக்கு திறந்த பிடிவிறாந்து பிறப்பித்து கட்டளையிட்டார்
2008 ம் ஆண்டு கல்லடியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொலை, ரி.எம்.வி;.பி கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொலை, வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கடத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
சிஐடியால் பிள்ளையான் உட்பட மூவர் கைது
இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஏற்கனவே 2025 ம் ஏப்ரல் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன். மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை கடந்த 2025 நவம்பர் மாதம் சிஐடி கைது செய்தது.

இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்புபட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான இலண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகம் பாய்ஸ், உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 யூன் 17 ம் திகதி சிஐடி யினர் வழக்கு தாக்கல் செய்து அவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு
இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (04) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொண்டபோது சந்தேக நபர்களான பிள்ளையான் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகிய 3 பேரையும் சிறைச்சாலைகளில் இணையவழி காணொளி ஊடாக (சூம்) முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது பிள்ளையான் சார்பில் சிரேஷ சட்டத்தரணி சௌந்தரராஜா முன்னிலையாகி பிள்ளையான் தற்போது வெலிசறை கடற்படை முகாம் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிறைச்சாலையில் இருந்து செல்லும் உணவை அந்த முகாமில் இருக்கும் இராணுவம் மற்றும் கடற்படையினர் பரிசோதனை செய்து அனுப்பப்படுவதால் அது சிதைவடைந்து செல்வதால் அதனை சாப்பிட முடியாமல் இருப்பதாகவும் அதனால் சாப்பாட்டை அவ்வாறு பரிசோதனை செய்யாது தருமாறும்
73 வயது கொண்ட பிள்ளையானின் தாயார் சுகயீனம் கொண்டவர் எனவும் அவருடன் கையடக்க தொலைபேசி ஊடாக 2 இல்லது 3 நிமிடம் கதைப்பதற்கு அனுமதி கோரி சட்டத்தரணி வாதங்களை முன்வைத்தார். இதன்போது நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அங்கு எவ்வாறான நடமுறையோ அதனை சரியாக பின்பற்றுமாறு தெரிவித்தார்.
இதேவேளை சிஐடி சார்பில் முன்னிலையாகிய சிஐடி பொறுப்பதிகாரி கடந்த வழக்கு விசாரணையின் போது குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளதால் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு முன்வைத்த கோரிக்கை தொடர்பாக குறித்த நபர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் எனவும் அவரின் பாது காப்பு உறுதி செய்யப்பட்டு பாதுகாப்பாக இருப்பதாகவும்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டவரை மட்டு சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பாக சட்டமா திணைக்களத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக சிஐடி பொறுப்பதிகாரி நீதிமன்றில் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நீதவான், பிள்ளையான் உட்பட 3 பேரையும் எதிர்வரும் 18ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டு லண்டனில் உள்ள பொலிஸ் பாய்ஸ்க்கு தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்து கட்டளை பிறப்பித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |