உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட சம்பூர் படுகொலை 35ஆவது ஆண்டு நினைவேந்தல்
சம்பூர் படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (07) மாலை சம்பூரில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகள் மற்றும் பொதுமக்களினால் மிகவும் உணர்வுபூர்வமான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது.
சம்பூரில் 1990ஆம் ஆண்டு யூலை மாதம் 07ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட 57பேர் உட்பட அதனை அண்மித்த காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்த நூற்றுக்கும் அதிகமான பொது மக்களுக்குமான அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்த உறவுகளுக்கு மலர்தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பெண் உரிமை பாதுகாவலர்கள் ,சிவில் அமைப்புகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
சீருடை அணிந்த ஆயுதம் தாங்கிய படைகள்
1990ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் திகதி இடம்பெற்ற இந்த கொடூரமான சம்பவத்தின்போது சீருடை அணிந்த ஆயுதம் தாங்கிய படைகள், பிற்பகல் 2.00 மணியளவில் சம்பூரில் அமைந்த குடியிருப்புகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன்போது மக்கள் தங்கள் பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்களுடன் சாக்கரவட்டவன் காட்டு பகுதிகளுக்கு பாதுகாப்பாக தஞ்சம் அடைந்தனர்.
பின்னர், ஊருக்குள் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆலயங்களில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் காட்டுக்குள் பதுங்கியிருந்த ஆண்களை பாதுகாப்புப் படைகள் வெட்டியும், சுட்டும், எரித்தும் படுகொலை செய்தனர். இந்தக் கூட்டுப் படுகொலையின் 35 ஆண்டுகள் கடந்தும், சம்பூர் மக்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை.
கிடைக்காத நீதி
யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகின்ற நிலையிலும், இலங்கையின் எந்தவொரு அரசும் இதுவரை உரிய நீதிச் செயல்முறைகளை மேற்கொள்ளவில்லை. இந்நாளில், தற்போதைய அரசு, சம்பூர் பகுதியில் இடம்பெற்ற படுகொலைகளுக்கான நீதியை உறுதி செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் பங்கு கொண்டிருந்தவர்கள் வலியுறுத்தினார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |












