கொக்கட்டிச்சோலை படுகொலை - தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழரசுக்கட்சி தனித் தனியாக அஞ்சலி!
இன்றைய தினம், மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை படுகொலையின் 36 வது ஆண்டு தினம் (28) உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மகிழடித்தீவு சந்தியில் உள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியில் குறித்த அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
இன்று காலை தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சி ஆகியன நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்தியது.
தனித் தனியாக நினைவேந்தல்

தமிழிரசுக்கட்சியின் நினைவேந்தல் நிகழ்வானது, இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நினைவேந்தல் நிகழ்வானது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் டெலோவின் செயலாளர் நாயகமுமான கோவிந்த கருணாகரம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
கொக்கட்டிச்சோலை படுகொலை

28-01-1987 மற்றும் 12-06-1991ஆகிய காலப்பகுதிகளில் இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் மகிழடித்தீவு இரால்பண்ணை மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளில் 239பேர் படுகொலைசெய்யப்பட்டனர்.
குறித்த படுகொலையில், சிறுவர்கள்,பெண்கள் மற்றும் முதியவுர்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.




