பெருந்தொகை கையூற்று பெற்ற நான்கு காவல்துறை அதிகாரிகள் கைது!
தனமல்வில, நிக்கவெவவில் உள்ள தெமோதர குளத்திற்கு அருகில் இருந்த கஞ்சா பண்ணை ஒன்றில் சோதனை நடத்திய பின்னர், சந்தேக நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக ரூ. 500,000 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் மொனராகல பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மொனராகலை பிரிவு குற்றப்பிரிவில் பணியாற்றும் 37 மற்றும் 45 வயதுடைய இரண்டு பொலிஸ் சார்ஜென்ட்கள் (Police Sergeant) , 39 வயதுடைய பொலிஸ் சாரதி மற்றும் 36 வயதுடைய மற்றொரு பொலிஸ் அதிகாரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனமல்வில காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு நிக்கவேவ தெமோதர வேவ பகுதியில் கஞ்சா பயிரிடப்படுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 11ஆம் திகதி காவல் அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்தியுள்ளனர்.
கஞ்சா செடி
இதன்போது சந்தேக நபர் ஒருவரும் கஞ்சா செடிகளும் கைப்பற்றப்பட்டன.

தொடர்ந்து அப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், குறித்த சந்தேக நபருக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் மேலும் மூன்று கஞ்சா பயிரிடப்பட்ட இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஏற்கனவே வெட்டி எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட மற்றொரு கஞ்சா பயிரிடும் இடமும் அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.
விசாரணைகளின்போது, மொனராகலை பிரிவு குற்றப்பிரிவைச் சேர்ந்த ஆறு காவல் அதிகாரிகள் ஆகஸ்ட் 10ஆம் திகதி குறித்த இடத்தில் சோதனை நடத்தியதாகவும், சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக தன்னிடமிருந்து ரூ.500,000 இலஞ்சமாக பெற்றதாகவும் சந்தேக நபர் காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
நான்கு காவல் அதிகாரிகள் கைது
மேலும், அங்கிருந்த ஐந்து கஞ்சா பயிரிடும் இடங்களில் ஒன்றை மாத்திரம் அதிகாரிகள் தீ வைத்து அழித்ததாகவும், ஏனைய இடங்களில் இருந்த கஞ்சா செடிகளை தங்களுடன் எடுத்துச் சென்றதாகவும் சந்தேக நபர் தெரிவித்ததாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனிடையே, நிக்கவேவ பகுதியைச் சேர்ந்த “கலு” என அழைக்கப்படும் மற்றொரு நபரும் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையின்போது, மொனராகலை பிரிவு குற்றப்பிரிவைச் சேர்ந்த ஆறு அதிகாரிகள் தன்னிடம் கஞ்சாவை உலர்த்துமாறு அறிவுறுத்தியதாக அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இரு சந்தேக நபர்களும் வெல்லவாயா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அவர்களை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பெறப்பட்டுள்ளது.
விசாரணைகளில் வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு காவல் அதிகாரிகளும் தனமல்வில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |