நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருளை நிராகரித்த அரச தரப்பு எம்.பிக்கள்!
பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) உட்பட 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தால் தமக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி, அவர்களில் 13 பேர் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், 16 பேர் ஏப்ரல் மாதத்திலிருந்தும், ஏனையவர்கள் மே, ஜூன், ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களிலிருந்தும் எரிபொருள் கொடுப்பனவை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சர்களான இராமலிங்கம் சந்திரசேகர், வசந்த சமரசிங்க, அனில் ஜயந்த, தம்மிக்க படபெந்தி, நாமல் கருணாரத்ன மற்றும் உபாலி சமரசிங்க ஆகியோர் கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து எரிபொருள் கொடுப்பனவு தேவையில்லை என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மாதாந்த சம்பளம்
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அவர்களின் எழுத்துப்பூர்வ கோரிக்கைகளின்படி அவர்களின் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மாதாந்த கொடுப்பனவு 54,285 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அவர்களுக்கு மாதாந்த மேலதிக கொடுப்பனவாக 1000 ரூபாய், தொலைபேசி கொடுப்பனவாக 50,000 ரூபாய், போக்குவரத்து கொடுப்பனவாக 15,000 ரூபாய், அலுவலக கொடுப்பனவாக 100,000 ரூபாய், கூட்டங்களுக்கான வருகை கொடுப்பனவாக தலா 2,500 ரூபாய் வழங்கப்படுகிறது.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையிலான தூரத்தின் அடிப்படையில் எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படுவதுடன் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதத்திற்கு 419.76 லீற்றர் டீசல் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
