மைத்திரியின் நியமனத்தை டக்ளஸ் உட்பட ஐந்து கட்சிகள் நிராகரிப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவை ஏற்கப்போவதில்லை என முன்னணயில் கூட்டுச் சேர்ந்துள்ள ஐந்து கட்சிகள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக இருந்த அமைச்சர் மகிந்த அமரவீரவை நீக்குவது தொடர்பிலோ அல்லது புதிய பொதுச் செயலாளரை நியமிப்பது தொடர்பிலோ தமக்கு அறிவிக்கப்படவில்லை என கூட்டறிக்கையில் அந்தக் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
மேலும், சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பு மற்றும் அதன் முன்னைய முன்னுதாரணங்களுக்கு அமைவாக இது தொடர்பில் நிறைவேற்று சபைக்கு அறிவிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கூட்டு கட்சிகள் அறிக்கை

மஹாஜன எக்சத் பெரமுனவின் (மக்கள் ஐக்கிய முன்னணி) பொதுச் செயலாளர் திஸ்ஸ ஜயவர்தன, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஏ.எல்.எம் அதாவுல்லா, இலங்கை மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர், உறுப்பினர் அசங்க நவரத்ன மற்றும் தேசவிமுக்தி ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் டி.கலன்சூரிய ஆகியோரின் கையொப்பத்துடன் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப்பதவியை பெற்ற காரணத்தால் முன்னணியின் பொதுச் செயலாளராக இருந்த மகிந்த அமரவீரவை நீக்கிவிட்டு திலங்க சுமதிபாலவை மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.