இலங்கையில் 2023 இல் மட்டும் 61,000 டெங்கு வழக்குகள் பதிவு
இலங்கையில் இவ்வருடம் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
எனினும் டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட அதிக ஆபத்துள்ள பிரதேசங்களின் எண்ணிக்கை 34 ஆக குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
2023 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின் படி இதுவரை நாட்டில் மொத்தம் 61,225 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஓகஸ்ட் மாதத்தில் குறைந்தளவு தொற்று

ஜனவரி முதல் யூலை வரையிலான மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஓகஸ்ட் மாதத்தில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
யூலை மாதத்தில் மொத்தம் 7,369 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். அதே சமயம் ஆகஸ்ட் மாதத்தில் கடந்த நாட்களில், 4,536 பேர் மட்டுமே பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 13,053 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் மொத்தம் 12,963 தொற்றாளர்களும், கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முறையே 4,976 மற்றும் 3,949 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.
டெங்கு மரணங்கள்

2023 ஆம் ஆண்டில் இதுவரை 38 டெங்கு மரணங்கள் மட்டுமே பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.