சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பித்தோர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்காக விண்ணப்பித்தவர்களில் சுமார் 8 சதவீதமானவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக வாகனம் செலுத்துவதற்குத் தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2024 ஆம் ஆண்டில் 9 இலட்சத்து 54 ஆயிரத்து 536 மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 69,728 பேர் உடல்நலக் குறைபாடு காரணமாக, சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதிலிருந்து தற்காலிகமாக நிராகரிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பார்வைக் குறைபாடு
இந்தநிலையில், அதிக எண்ணிக்கையானவர்கள் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, மருத்துவ பரிசோதனைகளில் 77 சதவீதமானோருக்குக் கண் பிரச்சினைகளும், 8 சதவீதமானோருக்குப் போதைப்பொருள் பழக்கமும், 4.48 சதவீதமானோருக்கு நீரிழிவு நோயும், 3 சதவீதமானோருக்கு உயர் இரத்த அழுத்தமும் 2.33 சதவீதமானோருக்கு இதய நோய் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |