காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 75 சதவீதமான விசாரணைகள் முழுமை
இலங்கையில் 1980ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பதிவுகளின் படி, 75 சதவீதமான விசாரணைகள் முழுமை பெற்றுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - கல்வியங்காட்டில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தில், நேற்று(06) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
“காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் ஊடாக மூன்று கட்டமாக பகுப்பாய்வு முன்னெடுக்கப்படுகின்றது. இவற்றில் இன்றைய காலப்பகுதியில் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பதிவுகளின்படி 75 சதவீதமான விசாரணைகள் முழுமை பெற்றுள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள்

இதில் இரண்டாம் கட்டப்பதிவாக காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் தரவுகளின் படி, 2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான விசாரணையினை முன்னெடுத்து வருகின்றோம்.
விசாரணைகளை மேற்கொள்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபரின் அறிக்கைகளையும் பெற்றுவருகின்றோம். இதேவேளை சந்தேகத்திற்கு இடமான கோவையினையும் பெற்றுவருகின்றோம்.
இவற்றில் 14 ஆயிரத்து 988 காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கோவைகளுக்கான விசாரணையை மேற்கொண்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இடர்கால நிவாரணங்களை வழங்குகின்றோம்.
எனினும், இழப்பீடு கொடுக்கப்படவில்லை எனவும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையின் படியே, இழப்பீடு தொடர்பில் ஆராயப்படும்“ எனவும் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.