பயணிகளிடம் அதிக கட்டணம் அறவிட்ட 80 பேருந்துகள் : எடுக்கப்பட்ட நடவடிக்கை
இலங்கையில் புத்தாண்டு காலத்தில் பயணிகளிடம் அதிகப்படியான கட்டணங்களை அறவிட்ட 80 பேருந்துகளுக்கு அபராதம் விதிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும் பேருந்து பரிசோதனை பிரிவின் பிரதானி ரோஹண வத்தகே இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 8ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை 680 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
பயணச்சீட்டுகளை வழங்காத பேருந்துகள்
இதன்போது அதிக கட்டணம் வசூலித்த 80 பேருந்துகள் கண்டறியப்பட்டதுடன், மேலதிகமாகப் பெறப்பட்ட பணம் மீளவும் பயணிகளுக்கே வழங்கப்பட்டதுடன் குறித்த பேருந்து நிர்வாகங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

நேற்று (18) மாத்திரம் சுமார் 150 பேருந்துகள் சோதனையிடப்பட்டதில், 12 பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி வரை 24 மணித்தியாலங்களும் முன்னெடுக்கப்படவுள்ளது” என தெரிவித்தார்.
இதேவேளை அதிக கட்டணம் அறவிடும் மற்றும் பயணச்சீட்டுகளை வழங்காத பேருந்துகள் குறித்து முறைப்பாடளிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தொலைபேசி இலக்கம்
இது தொடர்பாக எந்தவொரு காவல் நிலையத்திலும் முறைப்பாடு செய்ய முடியும் என அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா தெரிவித்தார்.

அத்துடன், மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அல்லது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் இது குறித்து அறிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
முறைப்பாடுகளை அறிவிக்க 1955 என்ற உடனடி தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயல்படும் என்றும் நிலான் மிரெண்டா மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |