ஆரம்பமாகும் புதிய தாழ்தள பேருந்து சேவை! வெளியாகியுள்ள தகவல்
எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி முதல் மாக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்திலிருந்து முன்னோடித் திட்டமாக தாழ்தள முன்னுரிமை பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
அனைவருக்கும் சம வாய்ப்புகளையும் மனித கண்ணியத்தையும் உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக, 'க்ளீன் சிறிலங்கா முன்முயற்சியின் கீழ் 430.7 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதன் முதற்கட்டமாக 10 நவீன குளிரூட்டப்பட்ட தாழ்தள பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், இவை சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலகுவாக ஏறி இறங்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
விசேட பாதுகாப்பு அம்சங்கள்
ஒரே நேரத்தில் 80 பயணிகள் பயணிக்கக்கூடிய இந்தப் பேருந்துகளில் 33 இருக்கைகள் காணப்படுவதுடன், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட பாதுகாப்பு அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தப் பேருந்து சேவைகள் மாக்கும்புரவிலிருந்து புறக்கோட்டை வரையிலும், மாக்கும்புரவிலிருந்து கடவத்தை வரையிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படவுள்ளன.
மேலும், இந்த வழித்தட வலையமைப்பானது மகரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட முக்கிய சுகாதார மையங்களையும் உள்ளடக்கியதாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |