கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இளம் யுவதி!
சட்டவிரோதமான முறையில் கட்டாருக்கு செல்ல முயற்சித்த இளம் யுவதியொருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்படாத முகவரகத்தின் ஊடாக கட்டாருக்கு வீட்டுப் பணிப் பெண்ணாக செல்ல முயற்சித்த யுவதியே இவ்வாறு கைது செய்யபட்டுள்ளார்.
இவர் மொரட்டுவ பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய யுவதி ஆவார். கட்டாரில் வீட்டு வேலை செய்வதற்கு 21 வயதுக்கு மேற்பட்ட யுவதிகளே விண்ணப்பிக்க முடியும் எனவே குறித்த யுவதிக்கு சரியான வயது பூர்த்தியாகவில்லை.
ஆவணங்கள்
இந்நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் டோஹா நோக்கிப் புறப்படும் Qatar Airways விமானமான QR-665 இல் ஏறுவதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.
குடிவரவு கவுண்டருக்கு, விமானத்தில் பயணிப்பதற்கு தேவையான அனுமதியை முடித்துவிட்டு ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு வந்துள்ளார்.
கத்தாரில் பணிபுரிய விசா பெற்றிருந்த நிலையிலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் அந்தப் பணிக்கான பதிவு, அந்நாட்டு வேலைவாய்ப்பு முகவருடன் செய்து கொள்ளப்பட்ட வேலைவாய்ப்பு ஒப்பந்தம், பயிற்சி சான்றிதழ் ஆகியவை இல்லாததால் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
ஆரம்பகட்ட விசாரணையின் போது கைது செய்யப்பட்ட யுவதியை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பெண் ஒருவர் அழைத்து வந்ததாகவும் 21,500 ரூபா பணம் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த யுவதி மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
