யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் : சந்தேகநபருக்கு நீதிமன்றம் விதித்த தடை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விவகாரத்தின் இரண்டாவது சந்தேகநபரான தாதிய உத்தியோகத்தர் நேற்றையதினம் (24) கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அவர் நாட்டைவிட்டு வெளியேற முடியாத வகையில் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சாண்டில்யன் வைசாலி என்ற சிறுமி காய்ச்சலுக்குச் சிகிச்சை பெறுவதற்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
யாழ்ப்பாணம் மேலதிக நீதவான்
அவருக்கு மணிக்கட்டில் கனோலா ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாட்களில் மணிக்கட்டு வீக்கமடைந்து பின்னர் அந்தப் பகுதி வெட்டி அகற்றப்பட்டது.
இந்த விடயத்தில் மருத்துவத் தவறு நேர்ந்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியதுடன், பல்வேறு தரப்பினரிடம் தமக்கான நீதியையும் கோரியிருந்தனர்.
இந்தநிலையில் குறித்த வழக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் உசைன் முன்னிலையில் நேற்றுமுன்தினம் (23) விசாரணைக்கு வந்தது.
இதன்போது, பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளான செ.லக்சயன், கு.புரந்திரன் ஆகியோர் பல்வேறு விடயங்களை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்ற நிலையில் வழக்கின் விசாரணைகள் மந்தகதியில் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
வெளிநாடுகளுக்குச் செல்ல தடை
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், இது தொடர்பான மேலதிக அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறும், விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய தரப்புக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, இரண்டாவது சந்தேக நபரான குறித்த தாதிய உத்தியோகத்தர், சிறுவர், பெண்கள் பிரிவால் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
அந்தத் தாதிய உத்தியோகத்தருக்குப் பிணை வழங்கிய நீதவான், அவர் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாதவாறு பயணத்தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

