நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் குழு : தேரர் கடும் சாடல்
நாடாளுமன்றத்தில் தற்போது அரசியல் வாதிகள் குழுவல்ல, நாட்டை அழிக்கும் நோக்கில் செயற்படும் பயங்கரவாதிகளே இருப்பதாக மிஹிந்தல ரஜமஹா விகாரையின் தலைவர் வணக்கத்துக்குரிய வலஹங்குனவேவே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களை நேசிக்கும் ஆட்சியாளர் யாரும் இல்லை என்றும், நல்லதோ கெட்டதோ, தங்களை வளப்படுத்திக் கொள்வதே அவர்களின் ஒரே நோக்கம் என்றும் அவர் கூறினார்.
கடுமையான அச்சுறுத்தலில் தேசிய பாதுகாப்பு
தேசிய பிக்குகள் ஒன்றியம் திப்பட்டி தொடர்பான விஞ்ஞாபனத்தை அஸ்கிரி மல்வத்து பீடாதிபதிகளிடம் கையளித்ததன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

தேசிய பாதுகாப்பு கூட கடுமையான அச்சுறுத்தலில் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பத்தின்படி, ஆயுதப்படைகளின் எண்ணிக்கை 100,000 ஆக குறைக்கப்படவுள்ளது. குறைந்தபட்சம் காவல்துறை மா அதிபரையாவது நியமிக்க முடியாமல் அரசு உள்ளது.
இந்த நாட்டுக்கு கேடு விளைவிக்கும் கட்சிகளை இல்லாதொழிக்க முயற்சிக்கிறோம். நாம் எதிர்பார்க்கும் புதிய ஆட்சியில் ஜே.ஆரின் அரசியலமைப்பு முதல் அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும்.
225 பேர் தேவையில்லை. 25 போதும்
இந்த நாட்டை ஆள 225 பேர் தேவையில்லை. 25 போதும். 75 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் நாட்டிற்கு என்ன செய்தார்கள்? நாட்டையே திவாலாக்கியது தான் மிச்சம்.

எனவே, நாட்டை ஆட்சி செய்யும் துரோகக் குழுவுடன் தொடர்பில்லாத புதிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும். நாடாளுமன்றம் என்ற பழைய சேற்றில் கிடக்கும் அனைவரையும் அகற்றிவிட்டு புதிய தலைமைத்துவத்தின் கீழ் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எங்களின் ஒரே நம்பிக்கை என தெரிவித்தார்.