ஜனாதிபதி ஆட்சி முறையை இல்லாமல் செய்தல் : இழுத்தடிக்கும் அநுர அரசு
இப்போது வந்திருக்கின்ற அரசு ஜனாதிபதி ஆட்சி முறையை இல்லாமல் செய்வதாக கூறியது. ஆனால் இந்த விடயத்தில் மிக காலதாமதம் செய்கின்றது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
இந்த அரசியல் முறைமை மாற்றம் என்பதில் தமிழ் மக்களுக்கான உரிமை, அரசியல் விடயம் தமிழ் மக்களுடைய தாயக பிரதேசம், அவர்களுடைய சுதந்திரம், சம்பந்தமான விடயங்கள் தொடர்பில் மிகத் தெளிவாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
காக்காச்சுவட்டைப் பிரதேசத்தில் நேற்று (17.01.2026) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார ரீதியில் பின்னடைவு
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் கட்சி சார்பாக சந்தித்த வேளையிலும் இந்த விடயங்கள் தொடர்பில் முயற்சிகளை எடுக்குமாறும் நாம் ஜனாதிபதியிடம் தெரிவித்தோம்.
முதல் தடவையாக ஜனாதிபதி எம்மிடம் தெரிவித்த விடயம் நாடு பொருளாதார ரீதியில் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது இவை தொடர்பில் இரண்டு வருடங்கள் கழித்த பின்னர் தங்களுடைய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது ஒரு வருடம் கழிந்திருக்கின்றது. அதற்கு அப்பால் மாகாண சபையை நடைமுறைப்படுத்துவதிலும் பாரிய இழுத்தடிப்புகள் அல்லது பாரிய தயக்கங்கள் காணப்படுகின்றன.
உண்மையாகவே தமிழ் மக்களுக்குரிய போதிய அதிகாரம் இல்லாமல் இருந்த போதும் கிடைத்த மாகாணசபை முறைமையைக்கூட வடகிழக்கு பகுதியிலே நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களுக்கு ஆகக் குறைந்தது மாகாண சபைகளை இயங்க விடுவதில்கூட இந்த அரசு மெத்தனப் போக்கை காட்டுவதாகவே தெரிகின்றது.
எனினும் இவை தொடர்பில் நாம் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெழியிலும் ஜனாதிபதியிடமும் எமது கருத்துக்களை நாம் வலியுறுத்திக் கொண்டு வருகின்றோம்.
அதிகளவு நிதி ஒதுக்கீடு
வடகிழக்குக்கு மிகவும் அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஏனெனில் வடகிழக்கில் கடந்த காலங்களிலே யுத்த காலங்களிலே இராணுவ கட்டுப்பாடற்ற பகுதிகளாக காணப்பட்டிருந்தன.
அப்பகுதிகளில் கடந்த காலங்களில் எந்தவித சுகாதார சேவைகளிலும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அந்த அடிப்படையில் அவற்றை மீள்காட்டி எடுப்பதற்கான பாரிய வேலை திட்டங்களை விசேடமாக செய்ய வேண்டிய பொறுப்பு கடந்த கால அரசுக்கு இருந்திருந்தது.

அவற்றுக்குரிய நிதி வசதிகள் கிடைத்திருந்தும் அவை முழுமையாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முழுமையாக செலவு அளிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் இந்த அரசாங்கம் எல்லோரையும் சமமாக பார்ப்போம் என தெரிவித்திருக்கின்றது.
இந்த விடயங்கள் சமமாக என்பதற்கு அப்பால் சுத்த காலத்திலும் யுத்தத்துக்கு பின்னரான காலப்பகுதியிலும் ஓரங்கட்டப்பட்ட வடகிழக்கு பகுதியிலே மிகவும் குறிப்பாக கடந்த காலத்தில் இராணுவ கட்டுப்பாடற்ற பிரதேசங்களாக இருந்த பகுதிகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு விசேட திட்டங்களை அனுமதித்து அவற்றின் ஊடாக பாரிய கட்டமைப்புகளை ஏற்படுத்தப்படல் வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரை பிரதேசத்தில் பாரியளவிலே வைத்தியசாலைகள் இல்லை. நகர் புறங்களிலே நான்கு ஆதார வைத்தியசாலைகளும், ஒரு போதனா வைத்தியசாலையும் காணப்படுகின்றன.
அமைச்சரவைக்கு அழுத்தம்
ஆனால் மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியிலே வெள்ள அனர்த்த காலங்களில் பாதைகள் துண்டிக்கப்படுகின்ற பொழுது நோயாளர்கள் தங்கி இருந்து சேவை செய்யக்கூடிய அளவிற்கு ஆதார வைத்தியசாலைகள் எதுவுமில்லை.
இந்த விடயங்களை மாவட்ட சுகாதார அமைப்புக்கள் ஊடாக பிராந்திய சுகாதார சேவைகள் ஊடாக பல விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றன.

ஆரம்ப சுகாதார வைத்திய பிரிவுகள் அமைப்பதற்காகவும் பல வைத்தியசாலைகள் தரம் உயர்த்துவதற்காகவும் பல விண்ணப்பங்கள் கடந்த காலங்களில் அனுப்பப்பட்டிருக்கின்றன.
சிறிய சிறிய செயற்றிட்டங்கள் மூலம் பல வைத்தியசாலைகள் மேம்படுத்தப்பட்டிருந்தாலும், குறிப்பிடப்பட்ட அளவு அந்த மக்களின் தேவைகளை கருதி அவற்றுக்கு ஏற்ற வகையில் சுகாதார வசதிகளை கருதிக் கொண்டு செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது.
இது சம்பந்தமாக பாரிய அழுத்தங்களையும் விண்ணப்பங்களையும் நாம் தொடர்ச்சியாக அமைச்சரவைக்கும் அரசுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |