பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடு : வெளியான அறிவிப்பு
அண்மையில் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 2024/2025 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வழிகாட்டல் கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இன்று (02.05.2025) வெளியிடப்பட்ட இந்தக் கையேடுகள் நாடெங்கிலுமுள்ள பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படவிருப்பதுடன், விண்ணப்ப முடிவுத்திகதி இம்மாதம் 30 எனவும், அனுமதிக்கான வழிகட்டல் கையேடுகளை நாளை 03ஆம் திகதி சனிக்கிழமை முதல் மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University Grants Commission) அறிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை முடிவு
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமைபெற்ற மாணவர்களில் அரச பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இல. 20, வாட் பிளேஸ், கொழும்பு 07 எனும் முகவரியில் அமைந்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலகத்தில் அல்லது நாடெங்கிலுமுள்ள பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடம் கையேட்டுக் கட்டணமாக ரூபா 1,000.00 செலுத்தி நேரடியாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
தபால் மூலம் அனுமதிக் கையேட்டைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் இலங்கை வங்கி, ரொறிங்டன் கிளையின் 0002323287 என்ற கணக்கிலக்கத்துக்கோ அல்லது மக்கள் வங்கி, நகர மண்டபக் கிளையின் 167-1-001-4-3169407 என்ற கணக்கிலக்கத்துக்கோ விண்ணப்பக் கட்டணமாக ரூபா 1,000.00 வைப்பிலிட்ட சிட்டையுடன் சுயமாகத் தயாரிக்கப்பட்ட வேண்டுகைக் கடிதத்துடன், சுயமுகவரியிடப்பட்ட தபாலுறையுடன் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும்,
மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் 011-2695301, 011-2695302 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
