அலி சப்ரியே நிதியமைச்சராக தொடர்வார் - கஞ்சன விஜேசேகர
அலி சப்ரியின் பதவி விலகலை அரச தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், அவர் நிதி அமைச்சர் பதவியில் நீடிப்பதாக இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, நிதியமைச்சரொருவர் இல்லாதமை தொடர்பில் சபையின் கவனத்திற்கு கொண்டு சென்ற வேளையில, இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த 3 ஆம் திகதி அமைச்சரவையைச் சேர்ந்த சகல அமைச்சர்களும் பதவி விலகியிருந்தனர்.
இதனையடுத்து, மறுநாள் நான்கு அமைச்சரவை அமைச்சர்கள் புதிதாக பதவியேற்றிருந்த நிலையில், அவர்களில் முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி, நிதியமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இருப்பினும், 24 மணித்தியாலத்துக்குள் நிதியமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக அமைச்சர் அலி சப்ரி அரச தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
எவ்வாறாயினும், புதிதாக பதவியேற்ற 4 அமைச்சர்கள் தொடர்பான விசேட வர்த்தமானி நேற்றைய திகதியில் வெளியிடப்பட்டிருந்த நிலையில் அதில் நிதியமைச்சராக அலி சப்ரியின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.