விடுதலைப் புலிகளுக்கு அநுரவின் வாக்குறுதி: சபையில் வெடித்த சர்ச்சை
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கும் அளித்த வாக்குறுதிகளின்படி அரசாங்கம் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக (D. V. Chanaka) குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (10) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து விட்டாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் அளித்த வாக்குறுதிகளை மறக்கவில்லை.
இராணுவ வீரர்
முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவின் கைதும் அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளின் படியே இடம்பெற்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் இருந்த ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர் சிறையில் உள்ளார்.
உலகின் வேறு எந்த நாடும் அவர்களுக்காக கடமையாற்றும் இராணுவ வீரர்களையும் கடற்படையினரையும் அவமதிப்பதில்லை.
பொறுப்பதிகாரி
அது இங்கு மட்டுமே நடக்கின்றது, காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரி ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் சென்று முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிராக வாக்குமூலம் வழங்குமாறு தெரிவிக்கின்றனர்.
குறித்த காவல் நிலையப் பொறுப்பதிகாரி, நீதிமன்றத்திற்கு சென்று தன்னை முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிராக வாக்குமூலம் வழங்குமாறு கட்டாயப்படுத்துகின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இது அனைத்தும் விடுதலைப் புலிகளின் புலம்பெயர்ந்தோருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் நிறைவேற்றப்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
