ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது!
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
ஊழல் மோசடிகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை விஸ்தரிப்பதும், மக்களுக்கு தேவையான தௌிவூட்டலை வழங்குவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
குறிப்பாக சொத்துகளுடன் தொடர்புடைய இலஞ்சம், ஊழல் மோசடி குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை கண்டறியவும் விசாரணை செய்யவும் வழக்கு தொடரவும், சுயாதீன ஆணைக்குழுவொன்றை நிறுவுவதற்கும் இதனூடாக சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விலக்களிப்பு இல்லை
இலங்கையில் சொத்து விபரங்களை வெளியிடுவது ஒரு சிலருக்கு விலக்களிக்கப்பட்டு வந்தது.
இருப்பினும், இந்த புதிய சட்டத்தின் பிரகாரம் அதிபர், மாகாண முதலமைச்சர்கள், ஆளுநர்கள், தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் சொத்து விபரங்களை வெளியிட வேண்டுமென நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ கூறியுள்ளார்.
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம்
இந்த ஊழல் ஒழிப்பு சட்ட மூலத்தை மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச அண்மையில் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.
ஊழல் ஒழிப்பு சட்டமூல வரைவை அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவதற்கு கடந்த மார்ச் 13 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இதேவேளை, குறித்த சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிரான சட்டமூல வரைவை தயாரிப்பதற்காக கடந்த வருடம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டது.
சட்ட வரைஞர்களால் தயாரிக்கப்பட்ட மேற்படி சட்டமூல வரைவுக்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது.
