தையிட்டி விகாரதிபதியிடம் ஆசிர்வாதம் வாங்கிய அநுர - யாழில் வெடித்த சர்ச்சை
வடக்கில் வந்து இனவாதம் வேண்டாம் என பேசும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இனவாதமாக செயற்படும் தையிட்டி விகாரதிபதியிடம் ஆசிர்வாதம் வாங்கியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் - மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்துக்கான நேற்றைய அடிக்கல் நாட்டு விழாவில் சர்வமத தலைவர்கள் வரிசையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் கலந்து கொண்டார்.
இதன்போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினார்.
தையிட்டி விகாரையை அகற்றி காணிகளை விடுவிக்க வேண்டும் என காணி உரிமையாளர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் அது தொடர்பில் கிஞ்சித்தும் கரிசனை கொள்ளாது, ஜனாதிபதி செயற்பட்டமை காணி உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தையிட்டி விவகாரம் பேசப்பட்ட போது எதுவித பதிலும் பேசாது மௌனமாக இருந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, விகாரைக்கு மாற்றுக் காணிகளை வழங்க துணை போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மக்கள் காணி மக்களுக்கே என்றும் அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் என பேசும் ஜனாதிபதி அது தொடர்பில் உண்மையாகவே செயற்படுகிறாரா என காணி உரிமையாளர்கள் பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

