விகாராதிபதிக்காக முன்னிலையான 20 சட்டத்தரணிகள்! மன்றில் கதியற்று நின்ற சிறுமி
சிறுமி ஒருவரை தகாத நடத்தைக்கு உட்படுத்திய அநுராதபுர பிரதான விகாரையின் தலைமை விகாராதிபதிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அநுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று (15.05.2026) குறித்த பௌத்த பிக்கு முன்னிலையாகாத நிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றன.
சந்தேகநபரான பல்லேகம ஹேமரத்தன பிக்கு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, சிரேஷ்ட சட்டத்தரணி ரஞ்சித் ராஜகருணா உள்ளிட்ட 20 சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.
சிறுமியின் உரிமை
இருப்பினும் தகாத நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சிறுமியின் உரிமைகளுக்காக எந்த வழக்கறிஞரும் அல்லது வேறு எந்த வெளித் தரப்பினரும் முன்னிலையாகவில்லை.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நீதியை நிலைநாட்டும் பிரிவின் நீதித்துறை பிரதானியாக கடமையாற்றும் சஞ்ஜீவனி அபேகோனின் முயற்சியினாலே தேரருக்கு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

அதுவரை தேரருக்கு பிடியாணை கூட பிறப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
சட்டத்தரணி சஞ்ஜீவனி அபேகோன் தனது முகநூல் பதிவொன்றில் இவ்வாறு தெரிவித்திருந்தார். சட்டத்திற்கு மேல் மதம் - நீதியை விட பணம் முன்னிலையில் என்று பதிவிட்டிருந்தார்.
இந்த சம்பவத்தில் அவ்வளவு அழுத்தம் நீதித்துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளதையே இந்த குறிப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தேசிய மருத்துவமனை
அநுராதபுரம் நீதிமன்ற நீதிபதி சியபத் சசிந்து விக்ரமரத்ன, பல்லேகம ஹேமரத்ன தேரரை 22 ஆம் திகதியன்று அநுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையில் தனது இளம் வயது மகளை தகாத நடத்தைக்காக சந்தேக நபரான பல்லேகம ஹேமரத்ன பிக்குவிடம் தெரிந்தே ஒப்படைத்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரை எந்தவொரு பிணை நிபந்தனைகளின் பேரிலும் விடுவிக்குமாறு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

சிறுமியின் தாயாரை இம்மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
இவ்விவகாரத்தில் முதல் சந்தேக நபரான பல்லேகம ஹேமரத்ன தேரர், கோட்டை நீதிபதி பாசன் அமரசேன பிறப்பித்த உத்தரவின்படி இம்மாதம் 22 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
12 நாள் வரை கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபரான பல்லேகம ஹேமரத்ன தேரரை, கோட்டை நீதிபதி பிறப்பித்த உத்தரவின்படி அத்தனியார் மருத்துவமனையிலிருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |