வெருகல் மணல் அகழ்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் - கைதான இருவருக்கு பிணை
வெருகல் பிரதேசத்தில் மணல் அகழ்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட இருவருக்கு மூதூர் நீதிவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியது.
வெருகல் பிரதேசத்தின் வட்டவான் கிராம பிரிவைச் சேர்ந்த வட்டவான் கிராம அபிவிருத்திச் சங்க தலைவரான கதிர்காமத்தம்பி திருநாவுக்கரசு மற்றும் வட்டவான் மரணசங்கத் தலைவரான தர்மலிங்கம் ஜெயகாந்தன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டு இன்று (29) மூதூர் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அணைக்கட்டு திருத்தும் பணிக்கு இடையூறு
வெருகல் - நாதனோடை பகுதியில் அணைக்கட்டு திருத்தும் பணிக்கு இடையூறு விளைவித்ததாகக்கோரி காவல்துறையினரால் இவர்கள் இருவரும் நேற்றையதினம் (28) இரவு 9.00 மணியளவில் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

குறித்த பகுதியில் 1000 கியூப் மணல் அகழ்வதற்கான அனுமதி தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்த நபர் மணல் அகழும் இயந்திரம் (பெக்கோ )மற்றும் டிப்பர் வாகனங்களைக்கொண்டு சட்டத்திற்கு முரணான வகையில் மணல் அகழ்வதற்காக நேற்றைய தினம் (28) அவ்விடத்திற்கு சென்றபோது குறித்த வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள் இதனையடுத்து மணல் அகழும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதன் பின்னனியில் அன்றையதினம் இரவு அந்த நபர்கள் இருவரும் அணைக்கட்டு திருத்தும் பணிக்கு இடையூறு விளைவித்ததாகக்கோரி ஈச்சிலம்பற்று காவல்துறையினரால் கைது செய்யபட்டிருந்தார்கள்.
அத்துடன் மேலும் சிலரையும் கைது செய்வதற்காக தேடி வருவதாகவும் தெரிய வருகின்றது.
மக்கள் வெள்ளத்தில் சிக்கும் அபாயம்

குறித்த நபர்கள் இன்று (29) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது ஏதிரியின் சார்பாக ரமணன் மற்றும் முகுந்தன் ஆகிய சட்டத்தரணிகள் முன்னிலையாகி அப் பகுதியில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழும் இயந்திர (பெக்கோ) வாகனங்களைக் கொண்டு மணல் அகழும் நடவடிக்கையில் முறைப்பாட்டாளர் தரப்பு ஈடுபட்டதாகவும் குறித்த பகுதியில் மணல் அகழப்படுமானால் அது அணைக்கட்டு உடைப்பிற்கு வழிவகுக்கும் என்பதோடு மக்கள் வெள்ளத்தில் சிக்கும் அபாயம் ஏற்படும்.
இதனால் மக்களும் மக்களுடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்பதால் அதனை மக்கள் நேற்றைய தினம் (28) எதிர்த்திருந்தனர் எனவும் இவர்கள்மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும்,காவல்துறை பக்கச்சார்பாகவும் நடந்து கொள்வதாகவும் தெரிவித்து அது தொடர்பான புகைப்படச் சான்றுகளை முன்வைத்து வாதாடியிருந்தார்கள்.
இதன்போது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிவான் குறித்த மணல் அகழ்வு தொடர்பாக நீதிமன்றை நாடி தடையாணை ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து குறித்த இருவருக்கும் பிணை வழங்கி வழக்கை (31.10.2023) அன்று ஒத்தி வைத்தார்.