அஸ்வெசும நிதியில் பெரும் மோசடி! 14 அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
நாடு முழுவதும் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 அரசு அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அஸ்வெசும நிதியைத் தங்களது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகத் சபையின் தலைவர் நிமல் கொட்டவெலகெதர தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு முதல் பிரதேச செயலக மட்டத்தில் நலன்புரி உதவிகளை வழங்குவதிலும் விநியோகிப்பதிலும் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் குறித்து நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை
இந்நிலையில், பதவி அல்லது தரம் எதுவாக இருப்பினும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெலகெதர வலியுறுத்தியுள்ளார்.

இந்த அஸ்வசும கொடுப்பனவு மோசடி தொடர்பாக நோர்வுட் பிரதேச செயலகம் மற்றும் பல பிரதேச செயலக அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு எதிராகச் சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடுமையான நடவடிக்கை
விசாரணைகளின்படி, நோர்வுட் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகளின் தனிப்பட்ட கணக்குகளுக்கு மோசடியான முறையில் நிதி மாற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அரசு அதிகாரிகள் இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், தவறிழைக்கும் எவருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை தொடரும் என எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |