கந்தளாயில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்!
கந்தளாய் அக்போபுர காவல்துறை பிரிவில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர் மீது, விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதி மற்றும் அவரது உதவியாளர் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அக்போபுர காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்து
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, கந்தளாய் - அக்போபுர காவல் பிரிவுக்குட்பட்ட கித்துல்ஊற்று பகுதியில் நேற்று (06) இரவு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே இந்த விபத்துக்குக் காரணம் என காவல்துறையினர் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.
குறித்த லொறி சாரதி, இதற்கு முன்னர் கந்தளாய் - சூரியபுர பகுதியில் ஒரு விபத்தை ஏற்படுத்தியிருந்தார். அந்தச் சம்பவத்தையும் இதே ஊடகவியலாளரே அறிக்கையிட்டிருந்தார்.
ஊடகவியலாளர் மீது தாக்குதல்
இந்நிலையில், இன்றைய தினம் (07) காலை கித்துல்ஊற்று விபத்தைப் படம் பிடிக்கச் சென்றபோது, பழைய கோபத்தை மனதில் வைத்துக்கொண்ட சாரதியும் அவரது உதவியாளரும் இணைந்து, தன்னை தாக்கியிருப்பதாக ஊடகவியலாளர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கந்தளாய் பிரதேச ஊடகவியலாளரே லொறி சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோரால் தாக்கப்பட்டவராவார். தாக்குதல் குறித்து அக்போபுர காவல் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |