தனுஷ்க குணாதிலக மீதான தடைகளை நீக்கியது அவுஸ்திரேலிய நீதிமன்றம்!
இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக அண்மையில் பாலியல் வழக்கில் அவுஸ்திரேலியாவில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
பிணையில் அவர் விடுவிக்கப்பட்டிருந்தாலும், வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தவும், இரவில் வெளியே செல்வதற்கும் நீதிமன்றம் அவருக்கு தடை விதித்திருந்தது.
பிணை நிபந்தனையை மாற்றுவதற்கு சிட்னி டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் தனுஷ்க தாக்கல் செய்த விண்ணப்ப கோரிக்கையை நீதிமன்றம் ஏற்று, அவருக்கு எதிரான குறித்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
நீக்கப்பட்ட தடை
டிண்டர் செயலி ஊடாக அறிமுகமான பெண் ஒருவருடன் சிட்னியின் கிழக்குப் புறநகர் பகுதியில் விருப்பமில்லாத உடலுறவு கொண்டமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகள் தனுஷ்க குணதிலக மீது முன்வைக்கப்பட்டிருந்தது.
கடந்த நவம்பர் மாதம் அவுஸ்திரேலிய நீதிமன்றம் தனுஷ்கவுக்கு பிணை வழங்கியிருந்ததுடன், டிண்டர் மற்றும் பிற சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்திருந்தது.
மேலும், இரவு நேரத்தில் வெளியில் செல்வதற்கும், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொடர்புகொள்வதற்கும் அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இவரது பிணை விண்ணப்ப கோரிக்கையை ஏற்ற நீதவான் ஜெனிபர் அட்கின்சன், சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கும், இரவில் வெளியில் செல்லவும் தனுஷ்கவுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
மீண்டும் தவறிழைத்தால் கடும் தண்டனை
குறித்த விடயம் தொடர்பாக மனுதாரர் தரப்பு சட்டத்தரணி ஆட்சேபனை தெரிவித்ததுடன், இரவில் மீண்டும் அவர் குற்றத்தில் ஈடுபட அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் வாதிட்டுள்ளார்.
தனுஷ்க தடைகளை மீறி மீண்டும் தவறிழைத்தால், விசாரணைகள் அல்லது பல மாதங்கள் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.
மீண்டும் வழக்கு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
