பண்டா - செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறிந்த மகாநாயக்கர்களே காணி காவல்துறை அதிகாரத்திற்கும் முட்டுக்கட்டை!
பண்டா செல்வா ஒப்பந்தம், அன்று கிழித்தெறியப்படுவதற்கு காரணமான மகாநாயக்கர்களே, இன்று மாகாண சபைகளுக்கான காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்கும் விடயத்திலும் தடையாக இருக்கின்றார்கள் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் விசனம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க மகாநாயக்கர்களை சந்தித்த போது மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கக் கூடாது என விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் இன்று மாலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“சுதந்திரத்திற்கு முன்பாக இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வை தரப் போவதாகவும், அதன் ஒரு அம்சமாக 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறையாக்குவதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தார். இருந்த போதும், நேற்று முன்தினம் அதிபர், மகாநாயக்க தேரர்களை சந்தித்த போது, 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கூடாது என்றும் குறிப்பாக காணி, காவல்துறை அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
75 ஆண்டுகளாக தொடரும் இனப்பிரச்சினை
இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தொடர்ந்து 75 ஆண்டுகளாக இனப்பிரச்சினைக்கான தீர்வுகளை எட்டுவதற்கான பல்வேறுபட்ட ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், பேச்சுவார்த்தைகள் என்பன முன்னெடுக்கப்பட்டாலும், அவை அனைத்தும் பேரினவாத சக்திகளினால் தடைப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றன.
அந்த வரிசையில் தற்போது 13ஆவது திருத்தத்தை கூட முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடாது எனும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தினால் தமிழர்களுக்கு தீர்வு கிட்டாது என்பதும், உள்நாட்டு பொறிமுறைகள் மூலமாக இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது அதனால் சர்வதேச பொறிமுறை ஒன்று தான் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரேவழி எனும் விடயம் மகாநாயக்கர்களின் இந்த கருத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
பண்டா செல்வா ஒப்பந்தம்
1956ஆம் ஆண்டில் பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்படுவதற்கும், தற்போது மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை வழங்கும் விடயத்திலும் இதே மகாநாயக்கர்கள் தான் தடையாக இருக்கின்றார்கள். காரணமாக இருந்தார்கள்.
எனவே உள்நாட்டு பொறிமுறை என்பது ஏமாற்று வித்தையாகவே அமைந்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு உரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என இவ்வேளையில் கேட்டுக் கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.