வவுணதீவில் திடீர் முற்றுகை- பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
மட்டக்களப்பு - வவுணதீவில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 05 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் கசிப்பு உற்பத்திப் பகுதி முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் ஆயிரத்து 200 லீட்டர் கசிப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேசத்தின் வவுணதீவு காவல்துறை பிரிவில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து வாகனங்களுடன் ஏழு பேரை தாம் கைது செய்துள்ளதாக வவுணதீவு காவல்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
புலனாய்வு தகவலுக்கமைவாக சின்னக்கால போட்டமடு பகுதியில் இரண்டு உழவு இயந்திரப் பெட்டிகளில் அனுமதிப் பத்திரம் இல்லாது மண் ஏற்றும்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கனரக வாகனங்களில் அனுமதிப்பத்திரம் இருந்தும் அதன் நிபந்தனைகளை மீறி பாவற்கொடிச்சேனை பகுதியிலுள்ள வீதியால் மண் ஏற்றி செல்லும் போது மூன்று வாகனங்களும் அதில் இருந்த ஐந்து நபர்களையும் தாம் கைது செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, காஞ்சிரங்குடா காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வடிசாராயம் உற்பத்தி செய்ய தயார் நிலையில் இருந்த ஏழு பரல்களில் ஆயிரத்து 200 லீட்டர் கோடாவையும் தாம் கைப்பற்றியுள்ளதாகவும், இந்த வடிசாராயம் உற்பத்தியில் ஈடுபட்ட நபர்கள் காட்டுக்குள் தப்பிச்சென்றுள்ளதாகவும் காவல் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவரையும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுணதீவு காவல்நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த ஹப்புகாமி தெரிவித்துள்ளார்.