பொது மன்னிப்பு வழங்குவது ஜனாதிபதிக்குள்ள அதிகாரம்- அதையே அவர் பயன்படுத்தியுள்ளார்!
மிக நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்தவர் என்ற அடிப்படையில் கைதிகள் எல்லோரும் வெளியில் வரவேண்டும் என்பது எனது நிலைப்பாடு அதற்காக குற்றம்சாட்டப்பட்டவர்கள் எல்லாம் வெளியில் வருவதை மக்கள் விரும்பமாட்டார்கள்.
கணிசமான கைதிகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டது என்பதை நான் வரவேற்கின்றேன் இது என்னுடைய அதிகாரம் இல்லை ஜனாதிபதியினுடைய அதிகாரம் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரம் அவர் அதை பயன்படுத்தியுள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று முறக்கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கே இவ்வாறு பதிலளித்துள்ளார்,
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
அரசாங்கம் என்பது ஒரு பலமான மக்கள் அலையோடு வந்திருக்கின்றது, ஜனாதிபதி தேர்தலில் அவர்களின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட சில விடையங்கள் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. நான் கூட தற்போது இந்த கொரோனா காலகட்டத்தில் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தை நிறைவேற்ற முடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றேன்.
இருந்த போதிலும் இந்த அரசாங்கத்தால் தான் இவையெல்லாம் செய்து முடிக்க முடியும் என்று நான் நம்புகின்றேன். சிலர் எழுப்புகின்ற விமர்சனங்களை வைத்து ஒட்டுமொத்த இலங்கை மக்களினதும் விமர்சனம் என என்னால் கணிக்க முடியாது.
இந்த அரசாங்கம் ஒரு உறுதியான அரசாங்கமாக இருந்த காரணத்தால் தான் நாடு இந்தளவுக்கு காப்பாற்றப்பட்டு இருக்கின்றது. இதுதான் உண்மை. நல்லாட்சி அரசைப் போன்று ஒரு பலவீனமான அரசாங்கமாக இருந்திருந்தால் இலங்கையில் உள்ள 50 வீதமான மக்களுக்கு கொரோனா தொற்று வந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.
நிச்சயமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் மாற்றங்கள் வர வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த பொருளாதார பிரச்சினை இலங்கைக்கு மாத்திரமல்ல முழு உலகிற்கும் இந்த பிரச்சினை தற்போது வந்திருக்கின்றது. பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தங்களது விமர்சனங்களை வெளியிடுகிறார்கள். அது ஜனநாயகத்தின் வெளிப்பாடாகவே பார்க்கின்றேன்.
இலங்கையில் ஏற்பட்ட கப்பல் தீ விபத்தினால் இலங்கையில் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மீனவர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு இதனால் பாரிய பாதிப்பு இல்லை. நானும் மீனவ தொழில் சார்ந்து நிறைய அனுபவம் உள்ளவன் என்ற ரீதியில் தெரிவிக்கின்றேன் .
ரணில் விக்கிரமசிங்க நாட்டின் ஒரு பழமை வாய்ந்த அரசியல்வாதி சரியான நேரத்தில் எதிர்க்கட்சியை ஒன்றாக இணைத்து பலமான ஒரு கூட்டணியை உருவாக்கலாம் என்ற எண்ணத்தோடு வந்தாரோ தெரியவில்லை. அவருடைய முயற்சியால் என்னதான் செய்யப் போகிறார் என்பதை நாம் எதிர்காலத்தில் பார்க்கலாம்.
பொது ஜன பெரமுன கட்சிக்குள் மாகாணசபை தேர்தலை நடத்தக் கூடாது என்கின்ற பல விமர்சனங்கள் இருக்கின்றது. ஆனாலும் மொத்தமாக கூட்டுப் பொறுப்போடு முடிவெடுக்கும் போது அது அமுலாக்கப்படும். மட்டக்களப்பில் ஏற்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியாத ஒரு சம்பவம்.
இப்போது அந்தத் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. விசாரணைகளின் பின்பு என்ன நடந்தது என்பது தெரியவருமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.