மட்டக்களப்பை உலுக்கிய கொலைச்சம்பவம்: விசாரணையில் சிக்கிய மற்றுமொரு சந்தேக நபர்
மட்டக்களப்பில் பெண்களை கடத்தி தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிணற்றில் வீசி எறிந்து கொலை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் அந்த கும்பலுடன் தொடர்புபட்ட மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்துள்ளதாக கிழக்கு மாகாண குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்துள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (26-03-2026) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது..
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
உயிருடன் மீட்கப்பட்ட தாய்
சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 37 வயதுடைய முச்சக்கரவண்டி ஓட்டுநர் ஆவார்.

இவ்வாறு கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்தி வந்த சத்திர சிகிச்சைக்கு பாவிக்கும் மயக்க மருந்துகள் மற்றும் ஸ்பிரே,மாத்திரைகள் என்பவற்றை நேற்றைய தினம் (26.03.2026) மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 20 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடனும் ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் ஒருவர் சடலமாக கிணற்றில் இருந்தும் மீட்க்கப்பட்டனர்.
இதன்போது உயிருடன் இருந்த இளம்தாயின் 3 வயதும் 4 மாதம் கொண்ட சிறுமி வயல் பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தசம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண பிரதி காவல்துறைமா அதிபரின், வழிகாட்டலில் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் நேரடி கண்காணிப்பில் கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான காவல் துறை குழுவினர் அதிரடி விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
நகைக்கடை உரிமையாளர்கள் கைது
இதன்போது வவுணதீவு காவல்துறை பிரிவிலுள்ள காஞ்சிரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் அவரது 34 வயதுடைய அவரது கணவர், அவரது 22 வயதுடைய தம்பியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கிய ஊறணி, திருகோணமலை பகுதியை சேர்ந்த இரு நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் உட்பட 5 பேரை 24 மணித்தியாலத்தில் காவல்துறை கைது செய்தவுடன் இரு முச்சக்கரவண்டிகளும், கார் ஒன்று மற்றும் கோடாரி உட்பட கூரிய ஆயுதங்களை மீட்டுள்ளனர்.
காவல்துறை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களிடம் தொடர் விசாரணைகளை நடத்திய போது கொள்ளையர்களின் காஞ்சிரம்குடா வீட்டின் பகுதியில் நிலத்தில் மயக்க மருந்துக்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதத்துக்கு முன்னர் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரிடம் மயக்கத்துக்கு பாவிக்கும் “ஸ்பிரேயர்” வாங்கி வைத்துள்ளதாகவும் வெளி மாவட்டத்தில் உள்ள ஒருவரிடம் இருந்து இந்த மயக்க மருந்தை பல ஆயிரம் ரூபா பணம் செலுத்தி பெற்றுக் கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தடுப்பு காவலில் வைத்து விசாரணை
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை கடந்த 22 ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது தங்க ஆபரண கடைகளின் உரிமையாளர் இருவரையும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், கொலை கொள்ளையில் ஈடுபட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரையும் 72 மணித்தியாலம் காவல்துறை தடுப்பில் வைத்து விசாரணைக்கு செய்ய நீதவான் உத்தரவிட்டார்.

அதேவேளை இந்தகொலைகளின் பின்னணியில் உள்ள முழுமையான வலையமைப்பை கண்டறியும் நோக்கில் கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தி வருகின்றதுடன் குறித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று வெள்ளிக்கிழமை (27.03.2026) மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |