இளவாலை பகுதியில் மயக்கமுற்ற மாணவனுக்கு சிகிச்சையளிக்க தவறிய தாதியர்கள்
யாழ். மாவட்டம் - இளவாலைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மயக்கமுற்ற மாணவனுக்கு இளவாலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாத காரணத்தால் சிகிச்சை வழங்க முடியாமல் வாசலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம், நேற்றையதினம் (26.03.2026) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தாதியர் மறுப்பு தெரிவிப்பு
பாடசாலைக்கு அருகில் உள்ள பிரதேச வைத்தியசாலைக்கு குறித்த மாணவனை கொண்டு சென்ற நிலையில் அங்கு வைத்தியர் இல்லை எனவும் இரண்டு மணிக்கு பின்னரே வருகை தருவார் என வைத்தியசாலை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மாணவனின் உடல் நிலை கருதி தாதியர் ஒருவரை முதலுதவி செய்யுமாறு ஆசிரியர் ஒருவர் கேட்ட நிலையில் மாணவனுக்கு ஏதாவது நடந்தால் தமக்கு பொறுப்பாகிவிடும் நாங்கள் இதை செய்யமாட்டோம் என மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதி
மேலும், மாணவனை அனுப்புவதற்கு வேறு ஏதாவது நோயாளர் காவு வண்டி ஒன்றை ஒழுங்கு செய்து தாருங்கள் என கேட்ட நிலையில் அதுவும் எங்களிடம் இல்லை வேறு நோயாளர் காவு வண்டிகளும் இங்கு வராது என சாதாரணமாக பதில் கூறியுள்ளனர்.

அதனையடுத்து, வேறு வழி இன்றி மயக்கமடைந்த மாணவனை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |