மக்கள் வங்கியை தொடர்ந்தும் கறுப்புப் பட்டியலில் வைத்திருக்கும் சீனா! இலங்கையிலிருந்து சென்ற தகவல்
சீனாவின் கறுப்புப் பட்டியலில் இருந்து தம்மை நீக்குமாறு இலங்கை மக்கள் வங்கி கோரிக்கை முன் வைத்துள்ளதுள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இன்று குறித்த கறுப்புப்பட்டியலில் இருந்து தம்மை நீக்கிக்கொள்ள எதிர்பார்ப்பதாக மக்கள் வங்கி அறிவித்துள்ளது.
கடன் கடிதத்திற்கு அமைய சீன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக சீன தூதரகத்துக்கு அறிவித்தே மக்கள் வங்கி தன்னை கறுப்புப் பட்டியலில் இருந்து விடுவித்துக்கொள்வதற்கான கோரிக்கையை முன் வைத்துள்ளது.
முன்னதாக ஒப்பந்தத்தை மீறி கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்தாமையால் மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் இணைப்பதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் கடந்த 2021 ஒக்டோபர் 29 ஆம் திகதி அறிவித்திருந்தது.
சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக செயலகத்தினால் கறுப்புப் பட்டியல் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சீனத் தூதரகம் தெரிவித்திருந்தது.
அதன்படி, இலங்கையுடனான சர்வதேச கொடுக்கல் வாங்கலின் போது மக்கள் வங்கியினால் வெளியிடப்படும் கடன் சான்று பத்திரத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்குமாறு சீன முதலீட்டாளர்களுக்கு அறிவிப்பதாகவும் சீன தூதரகம் தெரிவித்திருந்தது.
இதனைவிட மக்கள் வங்கியுடன் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுக்கும் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடனான நிர்வாகத்தை முன்னெடுக்குமாறு அறிவிப்பதாகவும் சீனத் தூதரகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடன் கடிதத்திற்கு அமைய சீன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் டொலர் கடந்த 7 ஆம் திகதி செலுத்தப்பட்டது. இதனையடுத்தே மக்கள் வங்கி தற்போது, கறுப்புப் பட்டியலிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரியுள்ளது.