மன்னார் கடற்கரையில் கடற்படை சிப்பாயின் சடலம் மீட்பு!
மன்னார் (Mannar) கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் நேற்றைய (22.05.2025) தினம் மன்னார் - நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரகையில்,“குறித்த சிப்பாய் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடற்படையின் கண்காணிப்பு
குறித்த சம்பவமானது அச்சங்குளம் கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட்ட கடற்படையின் கண்காணிப்பு காவலரணில் நேற்று காலை 10.00 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு முதல் கட்ட விசாரணைகளுக்காக முருங்கன் காவல்துறையினர் தடயவியல் நிபுணர்கள், சென்று பார்வையிட்டனர்.
மேலதிக விசாரணை
பின்னர் மன்னார் மாவட்ட நீதிபதி வருகைத் தந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளின் பின்னர் மாவட்ட வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
உயிரிழந்த கடற்படை சிப்பாய் 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிய வந்துள்ளதுடன், குறித்த கடற்படை சிப்பாய் வங்காலை மற்றும் அச்சங்குளம் கடற்படை முகாமில் பணியாற்றி உள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



