மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மத்திய வங்கி பிணைப்பத்திர மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட பத்து நபர்களுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிபதிகள் பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோர் அடங்கிய நிரந்தர அமர்வு முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
இதன்போது, வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு முந்தைய கலந்தாய்வுக்காக இவ்வழக்கை எதிர்வரும் நவம்பர் 24-ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னிலையாகிய சந்தேகநபர்கள்
இன்றைய வழக்கு விசாரணையின் போது, 'பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் லிமிடெட்' நிறுவனம், அதன் பணிப்பாளர்களான ஜெஃப்ரி அலோசியஸ், அர்ஜூன் அலோசியஸ், நிறுவனத்தின் முதன்மை நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன மற்றும் புஷ்ய மித்ர குணவர்தன, சிட்ட ரஞ்சன் ஹுலுகல்லே, முத்துராஜா சுரேந்திரன், சமன் குமார ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

இருப்பினும், முதன்மைச் சந்தேகநபரான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் ஆறாவது சந்தேகநபர் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
கடந்த 2015-ஆம் ஆண்டு பெப்ரவரி 27-ஆம் திகதி நடைபெற்ற பிணைப்பத்திர ஏலத்தின் மூலம் அரசுக்கு 688 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு உட்பட மொத்தம் 23 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |