இலங்கை ஆடைகளுக்கு வரி இல்லாத சந்தையை திறக்கவுள்ள பிரித்தானியா!
இலங்கை ஆடை ஏற்றுமதிகள் இவ்வாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இங்கிலாந்துக்கு முழு வரியில்லா அணுகலைப் பெறும் என கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்தின் வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்ட சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய விதிகளின் கீழ் இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் உலகில் எங்கிருந்தும் 100 வீத மூலப்பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் இங்கிலாந்து சந்தைக்கு பூஜ்ஜிய வரி இல்லாத அணுகலை தொடர்ந்து அனுபவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடை ஏற்றுமதி
இந்த மாற்றங்கள் இலங்கையின் ஆடை ஏற்றுமதியை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை தற்போது இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய ஆடை ஏற்றுமதி இடமாக உள்ள நிலையில் இலங்கை அங்கு ஆண்டுதோறும் சுமார் 675 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுதியான ஏற்றுமதிகளைக் கொண்டுள்ளது.
இந்த சீர்திருத்தங்கள், 65 வளரும் நாடுகளுக்கு முன்னுரிமை சந்தை அணுகலை வழங்கும் ஐக்கிய இராச்சியத்தின் வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தில் பரந்த மாற்றங்களின் ஒரு பகுதியாகும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வர்த்தக கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் இங்கிலாந்தின் உறுதிப்பாட்டை இந்த சீர்திருத்தங்கள் பிரதிபலிப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மூலப்பொருட்களின் விதிகளை எளிமைப்படுத்துவதன் மூலம், இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான சந்தை அணுகலை இங்கிலாந்து மேம்படுத்துவதுடன், ஏற்றுமதிகளை பல்வகைப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆதரிக்கிறது என்றும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |