வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் அரசாங்கத்திற்கு இறுக்கமான ஆலோசனை
2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மக்கள் மீது வரிச்சுமையை சுமத்தாத நியாயமான, மனிதாபிமான வரவு செலவுத்திட்டமாக இருக்கும் என தாம் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்ததார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
வரவு - செலவுத் திட்டம்
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ''2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி சமர்ப்பிக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.
இந்த வரவுசெலவுத் திட்டம் மிகவும் முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் நாடு வீழ்ச்சியடைந்துள்ள தருணத்தில், பொருளாதார அழுத்தம் மற்றும் கையிருப்பு பற்றாக்குறையால் நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு இந்த வரவு செலவு திட்டம் ஒரு முக்கியமான கட்டத்தில் சமர்ப்பிக்கப்படுவதாக நாங்கள் நினைக்கிறோம்.
வரவு - செலவுத் திட்டம் மிகவும் இக்கட்டான நேரத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது என்பதை நாங்கள் அரசாங்கத்திற்குச் சொல்கிறோம்.
மீள்பரிசீலனை
எனவே 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் எவ்வாறு குறிப்பிட்ட இலக்குகளை கொண்டிருக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அவ்வாறு செய்யாவிட்டால் வரவு செலவுத் திட்டத்தை மீள்பரிசீலனை செய்ய நேரிடும் என்பதாகவும் வலியுறுத்துகிறோம்.
வரவு செலவுத்திட்டம் 2023 இல் நாங்கள் எதிர்பார்ப்பது, வீழ்ச்சி கண்ட பொருளாதாரத்தை மீட்பதற்கான வழிகாட்டுதலையும் நியாயமான காரணங்களையும், அதிலிருந்து மீள்வதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் வழங்கும் வரவு செலவுத் திட்டமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இது மிகவும் முக்கியமானது” - என்றார்.