நாமலின் பெயரை பயன்படுத்தி கிளிநொச்சியில் அடாவடி செய்த கும்பல்! (படங்கள்)
கிளிநொச்சி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட ஏ9 வீதியில் நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் அரச காணியை சட்ட ரீதியாக நீண்டநாள் குத்தகையில் பெற்று வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றவரின் தற்காலிக வீடு ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உடமைகளுக்கும் சேதமாக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
நாமலின் ஆள்தான் எனக் கூறி தர்மசிறி என்பவரே இவ்வாறு சேதத்தினை ஏற்படுத்தியுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம்.
குறித்த காணியினை அபகரிக்கும் முயற்சியில் இதற்கு முன்னரும் பல தடவைகள் நாமலின் பெயரை பயன்படுத்தி எம்மை அச்சுறுத்தி தாக்கியுள்ளார்.
இது தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் உள்ளது. ஆனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதில் அக்கறையின்றி உள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பிலும் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாமல் ராஜபக்சவின் ஆட்கள் நாங்கள் என்று கூறிய தர்மசிறி என்ற நபர் நேற்று மாலை எமது இடத்திற்கு வருகை தந்து இந்த காணியில் எந்த அபிவிருத்தியும் செய்யக்கூடாது மீறி செய்தால் வீட்டோடு அனைவரையும் தீயிட்டு கொளுத்தி விடுவேன் என்று அச்சுறுத்தியுள்ளார்.
கடந்த முறையும் வீட்டில் உள்ளவர்களை கட்டி வைத்து அடித்து விட்டு பொருட்களை சேதப்படுத்தியதோடு, துவக்குகளையும் காட்டி மிரட்டி சென்மை தொடர்பிலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் முறைப்படு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற விடயத்தினையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.