ஜூலை மாதம் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
வருடாந்த கட்டணத்துக்கு அமைய அடுத்த மாதம் பேருந்து கட்டணத்தை நிச்சயம் அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
டீசல் விலையை குறைந்த கட்டணத்தில் குறைத்து பேருந்து கட்டணத்தை அதிகரிக்காமல் இருக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கெமுனு விஜேரத்ன இவ்வாறு குறிப்பிட்டார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு
அவர் மேலும் தெரிவித்ததாவது, மத்திய கிழக்கில் மோதல் நிலைமை முடிவடைந்தாலும் எரிபொருள் விலையை குறைக்க கூடாது என்ற மனநிலையில் தான் அரசாங்கம் உள்ளது.

பழைய விலைக்கு எரிபொருள் கொள்வனவு செய்துள்ளதால் எரிபொருள் விலையை குறைக்க முடியாது என்று பிரதமர் குறிப்பிடுகிறார். எரிபொருள் விலை சூத்திரம் குறித்து அரசாங்கம் வெளிப்படைத்தன்மையில் செயற்படவில்லை.
எந்த விலைச்சூத்திரத்துக்கு அமைவாக எரிபொருள் விலை ஒவ்வொரு மாதமும் அதிகரிக்கப்படுகிறது என்று பலமுறை கேள்வியெழுப்பியும் அதற்கு இன்றுவரை பதில் கிடைக்கவில்லை.
டீசல் விலை
கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரையில் 06 முறை எரிபொருள் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது. எரிபொருள் விலைக்கமைய பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு முன்வைத்த கோரிக்கைக்கமைய பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.

வருடாந்த பேருந்து கட்டணத் திருத்தம் எதிர்வரும் மாதம் இடம்பெறவிருப்பதால் கட்டண அதிகரிப்புக்கு அனுமதியளிக்கப்படவில்லை. அடுத்த மாதம் டீசல் விலை குறைவடைந்தாலும் பேருந்து கட்டணத்தை நிச்சயம் அதிகரிக்க வேண்டும்.
டீசல் விலை குறைவடைந்துள்ளது ஆகவே பேருந்து கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்க முடியாது என்று குறிப்பிடுவதை ஏற்க முடியாது“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |