ட்ரம்புடன் வலுக்கும் முறுகல் : கனடா பிரதமரின் அறிவிப்பால் பரபரப்பு
கனடாவை(canada) இறையாண்மை கொண்ட நாடாக மதிக்கும் வரையில் ட்ரம்புடன்(donald trump) பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என உறுதிபட தெரிவித்துள்ளார் கனடா பிரதமர் மார்க் கார்னி(mark carney).
அமெரிக்காவின் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட கனடா நாட்டு வணிகர்களை அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி சந்தித்து பேசினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகுப்புகளையும், வளத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளையும் கார்னி அறிவித்தார்.
கனடாவுக்கான மரியாதை கிடைக்கும் வரை பேச்சுவார்த்தை நடக்காது
இதன் பின்னர் கனேடிய போர் அருங்காட்சியகத்தில் அவர் பேசியதாவது, வர்த்தகப் போரினால் அமெரிக்கர்கள் பாதிக்கப்படுவதால், அதனைத் தடுக்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விரும்புவார். அவர்கள் எப்போது வந்தாலும் அதற்கு நான் தயாராக இருக்கிறேன். இருப்பினும், இறையாண்மை கொண்ட நாடாக கனடாவுக்கான மரியாதை கிடைக்கும்வரையில் ட்ரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடக்காது என்று தெரிவித்தார்.
அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக கனடா
அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக கனடா இருக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், கனடா அரசு அதனை மறுத்து வருகிறது. இதனிடையே, கனடா மீது அமெரிக்கா அதிகளவிலான வரி விதித்ததையொட்டி, அமெரிக்கா வர்த்தகப் போரை விரும்புவதாக பலரும் கூறினர்.
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி கடந்த மார்ச் 14 ஆம் திகதியில் பதவியேற்ற நிலையில், இதுவரையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் தொலைபேசியில்கூட தொடர்பு கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி, முன்னாள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை ஆளுநர் என்று ட்ரம்ப் கூறியிருந்தாலும், தற்போதைய பிரதமர் மார்க் கார்னி குறித்து ட்ரம்ப் எதுவும் கூறவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்