கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் சேதம்: எழுந்துள்ள கண்டனம்
கனடாவின் பிராம்ப்டன், சின்குவாசி பூங்காவில் (Chinguacousy Park) அமைந்துள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் மீண்டும் ஒருமுறை திட்டமிட்டுச் சேதப்படுத்தப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாச்சலம் மற்றும் கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT) இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளன.
கடந்த 20ஆம் திகதி அதிகாலை வேளையில், இந்த நினைவுச் சின்னத்தின் பிரதான மேடை மற்றும் நினைவுப் பலகைகள் வர்ணங்கள் பூசப்பட்டுச் சிதைக்கப்பட்டுள்ளன.
திட்டமிட்ட சதி
இந்தச் செயல் அருவருப்பானது எனக் குறிப்பிட்டுள்ள விஜய் தணிகாச்சலம், இது ஒட்டுமொத்த ஒன்ராறியோ தமிழ் மக்களின் அடையாளம் மற்றும் வரலாற்றின் மீதான நேரடித் தாக்குதல் எனச் சாடியுள்ளார்.
வெறுப்புணர்வும் மற்றும் இனப்படுகொலையை மறுக்கும் போக்கும் ஒன்ராறியோவில் இடம்பிடிக்க முடியாது என அவர் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
I am absolutely disgusted by the vandalism of the Tamil Genocide Monument in Brampton. This monument is a sacred sanctuary of remembrance for the tens of thousands of lives lost and a foundational symbol of healing for survivors and their families who have made Canada their home.… pic.twitter.com/9qCjtYISFf
— Vijay Thanigasalam (@TheThanigasalam) March 22, 2026
இதனிடையே, இது ஒரு தற்செயலான நிகழ்வு அல்லவென்றும் கடந்த 2025ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களிலும் இதேபோன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்த நிலையில் இது திட்டமிட்ட ஒரு சதி என்றும் கனடியத் தமிழர் தேசிய அவை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வன்முறையின் பின்னணியில் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புடைய சக்திகளின் தலையீடுகள் இருக்கலாம் என குறித்த அமைப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
அத்தோடு பீல் பிராந்தியக் காவல்துறையினர் கண்காணிப்புக் கேமரா பதிவுகளின் அடிப்படையில் முறையான விசாரணை நடத்திக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |