யாழ்ப்பாணம் உட்பட 16 மருத்துவமனைகளுக்கு கிடைக்கப்போகும் வசதி
இந்த ஆண்டுக்குள், நாடு தழுவிய ரீதியில், நாட்டின் பல முக்கிய மருத்துவமனைகளில் 16 அதிநவீன இதய வடிகுழாய் செருகும் இயந்திரங்களை (Cath lab - Cardiac Catheterization Laboratory) நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கண்டி மற்றும் காலி ஆகிய மூன்று தேசிய மருத்துவமனைகளிலும், மட்டக்களப்பு, இரத்தினபுரி, பதுளை, காலி, யாழ்ப்பாணம், களுபோவில, அனுராதபுரம், குருநாகலை ஆகிய போதனா மருத்துவமனைகளிலும், திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையிலும் இந்த 16 அதிநவீன இதய வடிகுழாய் செருகும் இயந்திரங்களை நிறுவ சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
மட்டக்களப்பு, இரத்தினபுரி, பதுளை போதனா மருத்துவமனைகள் மற்றும் காலி தேசிய மருத்துவமனையில் நிறுவப்படவுள்ள நான்கு அதிநவீன இதய வடிகுழாய் செருகும் இயந்திரங்களுக்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தனது நிதி ஒதுக்கீடுகளின் அடிப்படையில் ரூ. 715 மில்லியனைச் செலவிடத் திட்டமிட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீடு
ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுகாதார அமைப்புகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், கொழும்பு தேசிய மருத்துவமனையில் மூன்று அதிநவீன இதய வடிகுழாய் செருகும் இயந்திரங்கள் நிறுவப்படும். மேலும், கண்டி தேசிய மருத்துவமனை, யாழ்ப்பாணம் மற்றும் களுபோவில போதனா மருத்துவமனைகளில் தலா ஒரு அதிநவீன இதய வடிகுழாய் செருகும் இயந்திரத்தை நிறுவுவதற்காக ரூ. 1188 மில்லியன் செலவிடப்படும்.

ஜெய்க்கா நிறுவனத்தின் உதவி
மேலும், ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) உதவியுடன், அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் இரண்டு அதிநவீன இதய வடிகுழாய் செருகும் இயந்திரங்களும், குருநாகல் மற்றும் பதுளை போதனா மருத்துவமனைகளில் ஆறு அதிநவீன இதய வடிகுழாய் செருகும் இயந்திரங்களும், கண்டி தேசிய மருத்துவமனை மற்றும் திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் தலா ஒரு இயந்திரமும் ரூ. 1200 மில்லியன் செலவில் நிறுவப்பட உள்ளன.

இந்த அனைத்து அதிநவீன இதய வடிகுழாய் செருகும் இயந்திரங்களையும் நிறுவுவதற்கான திட்டத்தின் மொத்த செலவு ரூ. 3103 மில்லியன் ஆகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |