முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்கள் சார்ந்த விடயங்களில் மௌனமாக இருப்பது ஏன்?
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் ஜனாசா குறித்து கோசம் எழுப்பினேன் ஆனால் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் மரணமான சிறுமி குறித்து நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என குறிப்பிட்டேன் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அது குறித்து பல விமர்சனங்கள் எழுகின்றன . அநியாயத்திற்கு எதிராக எப்போதும் குரல் கொடுப்பேன் அது யாராக இருந்தாலும் பரவாயில்லை . பலதடவைகள் அரசுக்கும், அமைச்சர்களுக்கும் மீனவர்களின் பிரச்சினைகளை பேசியுள்ளேன். ஆனால் எவ்வித பயனுமில்லாமல் இருக்கும் இவர்களுக்கு பாடம் புகட்டும் நடவடிக்கையாக அம்பாறை- கல்முனை வீதியை அரை மணித்தியாலயமாவது முடக்கி மீனவர்களின் பிரச்சினையை உரியவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
முடக்குங்கள் என்று நான் கூறமாட்டேன். முடக்கி உங்கள் சக்தியை காட்டுங்கள் . மட்டக்களப்பு- அம்பாறை மாவட்ட மீனவர்களின் படகுகளிலிருந்து ஆழ்கடலில் வைத்து களவாடப்படும் மீன்கள், சுருக்குவலைகள் தொடர்பில் இன்று மாளிகைக்காடு அந்நூர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற மீனவர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் எம்.பிக்கள் பலரும் உள்ள நிலையிலும் என்னையும் இங்கு கலந்து கொண்டிருக்கும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமத்திரனையும், நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனையும் அழைத்தமைக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். கல்முனை பிரதேச செயலக விவகாரத்தில் ஒன்றுமில்லை.
அதை வைத்து அரசியலை மட்டுமே செய்கிறார்கள். அந்த செயலகத்தை தரமுயர்த்துவதனால் முஸ்லிங்களுக்கு எவ்வித நஷ்டமும் இல்லை. பெயர் பலகையில் மாற்றம் வருமே தவிர தமிழர்களுக்கும் பெரிதாக ஒன்றும் கிடைக்கபோவதுமில்லை.
இது தொடர்பில் நான் பெரிதாக பேசுவதில்லை என்கிறார்கள். இதில் பேச ஒன்றுமில்லை. இதனை வைத்து கொண்டு அரசியல் மட்டுமே நடக்கிறது. சந்தர்ப்பம் வரும் போது மீனவர்களின் பிரச்சினையை பற்றி நாடாளுமன்றத்தில் பேசுவேன். கல்முனை பிராந்தியத்திற்கு தடுப்பூசி வழங்கவேண்டும் என்று நான் மட்டுமே தான் நாடாளுமன்றத்தில் பேசினேன் எனவும் தெரிவித்துள்ளார்.