குற்றவாளிகளை கைது செய்யுங்கள் என வலியுறுத்தும் நபர்களின் கழுத்தை பிடிக்கின்றார் கோட்டாபய!
நாட்டிலுள்ள டொலர் பற்றாக்குறையை மூடி மறைப்பதற்கே சிறிலங்கா அரசாங்கம் இன்று உரப்பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
மக்கள் ராஜபக்ஷக்களையும், அரசாங்கத்தை பலப்படுத்தும் கட்சிகளையும், 20ஆம் திருத்தத்திற்கு கைதூக்கிய நபர்களின் கழுத்தையும் பிடித்து வெளியில் வீசுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் தற்போது இரண்டு பில்லியன் டொலரே கையிருப்பிலுள்ளது.
இந்த நிலையில் இலங்கைக்கு டொலரினால் வரும் அனைத்து கட்டணங்களையும் 180 நாட்களுக்குள் இலங்கை ரூபாவிற்கு மாற்றுவதற்கு சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதன் ஊடாக நாட்டில் இருக்கும் டொலர் பற்றாக்குறையை உறுதிபடுத்துகின்றன. ஆனால், இந்த சட்ட மூலத்தினால் இலங்கையிலுள்ள ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களிடையே கருப்புச் சந்தையை ஏற்படுத்தும்.
குறிப்பாக, வர்த்தக அமைச்சர் எவ்வாறான விளக்கத்தை கொடுத்தாலும் புதிய சட்டத்தினால் இலங்கையில் கருப்பு டொலர் சந்தை ஏற்படும். கருப்புச் சந்தையில் இன்று ஒரு டொலர் 240 ரூபாவிற்கு விற்பனை செய்யும் போது வெளிநாட்டில் வேலை செய்யும் பணிப்பெண்கள் கூட கருப்புச் சந்தை ஊடாக இலங்கைக்கு அனுப்பலாம். இவ்வாறான டொலர் பற்றாக்குறையை மறைப்பதற்காகவே உரப்பிரச்சினையை ஏற்படுத்தியுள்னர்.
ஆனால், இலங்கையில் தேவையான இராசாயன உரம் இருக்கின்றது. எனினும், 2 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட யூரியா இன்று 14 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், போராட்டம் செய்ய வேண்டியது விவசாயிகள் அல்லது வறுமையிலுள்ள மக்களே போராட வேண்டியுள்ளது. விவசாயிகள் கடன் பெற்றாவது தங்களுடைய விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பர்.
ஆனால், வறுமையிலுள்ள மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். விவசாயிகள் பாதிக்கப்பட்டால் அதற்கான நஷ்டஈடை தருவாதாக அரசாங்கம் கூறுகின்றன. ஆனால், நஷ்டஈடு வழங்குவதா அரசின் கொள்கை. இந்த நஷ்டஈடும் பொதுஜன பெரமுனவின் பணத்தால் வழங்கப்படாது. மாறாக, இந்த நாட்டிலுள்ள மக்களின் வரிப்பணத்திலேயே வழங்கப்படும்.
இவ்வாறு நஷ்டஈடு வழங்கப்பட்டால் விவசாயிகளுக்கு பணம் கிடைக்கும். ஆனால், நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க முடியாது. அதேபோன்று, எதிர்வரும் சில மாதங்களில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க முடியாது. இன்று மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள வரிசையில் இருக்கின்றனர். எரிபொருள் நிலையங்களில் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ளும் பணம் பலம் படைத்தவர்கள் வீடுகளில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
மேலும், தொழில்நுட்ப பொருட்களுக்கு தற்போது கருப்புச் சந்தை ஏற்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் காலத்தில் வங்கிகளும் பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்பதையும் தடுக்க முடியாது. இவ்வாறான நிலையில் இலங்கை ரூபாவின் மீது நம்பிக்கை இழக்கும் பட்சத்தில் மக்கள் வங்கிகளில் சேமித்திருக்கும் பணத்தையும் மீளபெற்றுக்கொள்வார்கள் அரசாங்கத்தை உள்ளிருந்து விமர்சிப்பது அர்த்தமற்ற ஒன்றாகும்.
20 ஆம் திருத்தத்திற்கு கைதூக்கும் வேளையில் ஏன் இவர்களுக்கு சிந்திக்க முடியாது போனது? சீனாவின் பொறிக்குள் சிக்குண்டு நாடு நெருக்கடியை சந்திக்கும் என்ற காரணத்தினால் தான் போர்ட் சிட்டி சட்டமூலதிற்கும் நாம் கைதூக்கவில்லை, 20 ஆம் திருத்ததிற்கும் கைதூக்காமல் இருக்க காரணமும் இதுவே. இன்று அரசாங்கத்தில் இருந்துகொண்டு எதிர்கட்சியாக செயற்படமுடியாது.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில் கோட்டாபய வெளிநாடுகளுக்கு சென்று பொய்களை கூறி வருகின்றார். இயற்கை உரத் திட்டத்திற்கு மாறியுள்ளதாக கூறி வருகின்றார். சர்வதேசத்திற்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் அரச தலைவர்கள் நிறைவேற்றவில்லை. யுத்தம் முடிந்த பின்னர் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுப்பதாக முழு உலகத்திற்கும் வாக்குறுதி கொடுத்து உதவிகளை பெற்றுக்கொண்டனர்.
ஆனால் கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. அதனால் தான் இன்றும் எந்தவொரு நாடும் இலங்கைக்கு உதவிசெய்ய மறுத்து வருகின்றன. மேலும் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சகல மக்களுக்கும் ஒரே மாதிரி சட்டம் இயங்கும் என நாம் எதிர்பார்த்தால் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சட்டம் பின்பற்றப்படுகின்றது.
அதுமட்டுமல்ல, இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்கள் வேண்டாம் என்ற கொள்கையில் அரசாங்கம் இருகின்ற நிலையில், இந்த செயலணிகள் “ஒரே நாடு ஒரே சட்டம்” என்பதை நாம் கருத்திற் கொள்ளப்போவதில்லை. இந்த ஆணைக்குழுவின் தலைவர் யார்? அவரது தகுதி என்ன? என்பதை புதிதாக கூற வேண்டியதில்லை. இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்கள் வேண்டாம் என்ற நிலையில் அரசாங்கம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது.
ஜனநாயகம், சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுக்காக்க மாட்டார் என்பதெல்லாம் எமக்கு தெரியும். ஆனால் குற்றவாளிகளை கைது செய்வார், ஈஸ்டர் தாக்குதலில் குற்றவாளிகளை தண்டிப்பார் என நினைத்தோம். ஆனால் குற்றவாளிகளை கைது செய்யுங்கள் என வலியுறுத்தும் நபர்களையே கழுத்தை பிடிக்கின்றார்.
குற்றவாளிகளை கைது செய்வதாகவோ அல்லது நியாயத்தை நடைமுறைப்படுத்தவோ அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிறு சிறு தவறுகளை செய்தனர்.
அவர்கள் குற்றவாளிகள் என்றால் அவர்களுக்கு தண்டனை வழங்கி விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு பிரச்சினைகளுக்கு அரசாங்கம் செவிமெடுக்கவில்லை என்றால், தீர்வு வழங்கவில்லை என்றால், மக்கள் ராஜபக்ஷர்களையும், அரசாங்கத்தை பலப்படுத்தும் கட்சிகளையும், 20 ஆம் திருத்தத்திற்கு கைதூக்கிய நபர்களின் கழுத்தை பிடித்து வெளியில் வீசுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.