அரச எதிர்ப்பாளர்கள் மீது "பயங்கரவாத முத்திரை" - புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்!
"அரச எதிர்ப்பாளர்களுக்கு ‘பயங்கரவாதிகள்’ எனும் முத்திரையைக் குத்தி அவர்கள் மீது அடக்குமுறையை பிரயோகிக்கவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்படுகின்றது.
இது எமது நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல் மற்றும் சவாலாகும்."
இவ்வாறு, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்
மேலும் அவர்,
"பயங்கரவாதிகளையும், அரச எதிர்ப்பாளர்களையும் ஒன்றாக காண்பித்து, அனைத்து அரச எதிர்ப்பாளர்களையும் ஒடுக்குவதற்கான கொண்டு வரப்பட்ட சட்டமே இதுவாகும்.
ஜே.ஆர் ஜயவர்தன அன்றைய ஆட்சியில் செய்ததையே இப்போதைய ஆட்சியாளர்கள் செய்ய எத்தனிக்கின்றனர்.
இந்த புதிய சட்டமூலத்தை எமது சுதந்திர மக்கள் சபை கடுமையாக எதிர்க்கும்.
அரசுக்கெதிராக சாதாரண போராட்டம் நடத்தினால் கூட கைது செய்யப்படும் நிலைப்பாட்டை இந்த சட்டமூலம் காட்டுகிறது.
இதன்மூலம் பிரதி காவல்துறைமா அதிபருக்கு அதிகாரம் வழங்கப்படுவது நகைப்புக்குரிய விடயமாகும்.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் முழு நாடும், தொடர்ந்து அவசரகால சட்டத்தின் கீழ் இருக்கும் நிலையை தோற்றுவிக்கும்." என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
