செம்மணி அகழ்வு இடம்பெறும் பகுதிக்கு அனுமதியுங்கள்: சிறீதரன் அவசர கோரிக்கை - நீதிவானின் அறிவிப்பு
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதிக்கு தன்னையும் அனுமதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில் சட்டத்தரணி ஒருவரின் பிரசன்னத்துடன் அகழ்வுப் பணி இடம்பெறும் பகுதிக்கு விஜயம் செய்வது தொடர்பில் பரிசீலிப்பதாக யாழ்ப்பாணம் நீதிவானால் மன்றில் அறிவிக்கப்பட்டது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று யாழ்ப்பாணம் (Jaffna) நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் பிரதேசத்துக்குத் தனது பிரசன்னம் முக்கியமானது எனவும், தன்னை அனுமதிக்குமாறும் மன்றில் கோரிக்கை முன்வைத்தார்.
நீதிமன்றில் பரிசீலனை
அந்தக் கோரிக்கை நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே மன்றில் இருக்கின்ற கட்டளைகளுக்கு அமைவாக நபர் ஒருவர் செம்மணி மனிதப் புதைகுழிக்கு விஜயம் செய்கின்றபோது மன்றுக்கு முறையாக விண்ணப்பம் செய்து தான் விஜயம் செய்வதற்கான காரணத்தைக் குறிப்பிடும் நடைமுறை உள்ளதை நீதிவான் மன்றில் எடுத்துரைத்தார்.
சமர்ப்பணங்களையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், சட்டத்தரணி ஒருவரின் பிரசன்னத்துடன் அகழ்வுப் பணி இடம்பெறும் பகுதிக்கு விஜயம் செய்வது தொடர்பில் பரிசீலிப்பதாக நீதிவானால் மன்றில் அறிவிக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

