செம்மணி மூன்றாம்கட்ட அகழ்வுப் பணி! நிதி ஒதுக்கீடு குறித்து முக்கிய அறிவிப்பு
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை இரண்டு கட்டங்களாக அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 240 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 239 என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டிருந்தன.
இதன்படி மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகள் சீரற்ற காலநிலை காரணமாகப் பிற்போடப்பட்ட நிலையில், இந்த மாதத்தின் இறுதியில் அல்லது எதிர்வரும் மாதத்தின் ஆரம்பத்தில் அந்தப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது.
அகழ்வுப் பணி
எனினும், அகழ்வுப் பணிகளுக்கான நிதி ஒதுக்கப்படாததால், மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிக்கான திகதிகள் இதுவரை நிர்ணயம் செய்யப்படவில்லை.

இவ்வாறான நிலையிலேயே, இந்தப் பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று மீள விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
நிதி விடுவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் அகழ்வுத் திகதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளன என்று கருதப்படுகின்றது.